Thursday, June 10, 2010

போபால் விஷவாய்வு விபத்து


போபால் விஷவாய்வு விபத்து தீர்ப்பு - தமிழகத்தில் டி.ஓய்.எப்.ஐ கறுப்புத்துணி கண்ணில் கட்டி ஆர்ப்பாட்டம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு.
1984ம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனைடு விஷவாயு கசிந்ததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செத்து மடிந்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இப்போதும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் முழு வளர்ச்சியற்றவர்களாக பிறக்கிறார்கள் என்பதிலிருந்து, 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த பயங்கர நிகழ்வின் கொடூரத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தாமதப்படுத்தப்பட்டது மட்டுமின்றி இப்போதும் கூட மறுக்கப்பட்ட நீதியாகவே உள்ளது. இந்நிலையில் போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கு தலா இரண்டு ஆண்டு சிறையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்றும் நீதிமன்றம் மிகுந்த கருணையோடு கூறியுள்ளது. இதை டி.ஒய்.எப்.ஐ வண்மையாக கண்டிக்கிறது. மேலும், நீதித்துறையின் சட்டங்கள் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்பதையும் போபால் விஷவாயு வழக்கில் வெளிவந்துள்ள அரைகுறையான தீர்ப்பு உணர்த்துகிறது. பல்லாண்டுகாலம் போராடிய மக்களையும், மக்கள் இயக்கங்களையும் அச்சுறுத்தும் விதத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு ஏற்புடையதல்ல. சிபிஐ உடைய வழக்கு விசாரணையும் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசின் சிந்தனைப் போக்கை இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. எனவே, இந்த தீர்ப்பு ஞாயமற்றது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருதுகிறது. விபத்திற்கு பிறகு இந்தியாவை விட்டு வெளியேறிய வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், உயிர் இழந்து உடமைகள் இழந்த ஊனமுற்ற மனிதகுலத்திற்கு முழுமையான நிவாரணம் கிடைக்க மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்த விரும்புகிறது. இந்த திர்ப்பை கண்டித்து உடனடியாக சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய பெருநகரங்களில் நாளை ஜூன் 09ஆம் தேதியும், மற்ற இதர மாவட்டங்களில் மாற்று தேதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்களில் கறுப்புத்துணி கட்டி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை மாநிலக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.